Sunday, July 1, 2012

மரமே! மனமே!


உயிர் தொடும்
சுவாசம் தந்துவிட்டு
எந்த பலனையும்
எதிர்பாராமல்
எதிர் திசையில் ஓடுகின்றன
சாலையோர மரங்கள் !

யார் யாருடைய
இறுதி ஊர்வலங்களுக்கோ
அஞ்சலி செலுத்த
சாலை பரப்பில்
பூக்கள் உதிர்க்கின்றன
நிழற்சாலை மரங்கள்!

மரம் போல்
நிற்கிறாயே ? என்று
இனி
மறந்தும் யாரையும்
சொல்லிவிடாதீர்!
மரம்
மனிதரை காட்டிலும்
மகத்தானது !


Sunday, June 10, 2012

பிரளயம்


கடல் கொண்ட

லெமுரியா  கண்டத்திற்கு பின்

பிரளயம் ஏதும் கண்டதில்லை என்று

பிரமித்திருந்த தமிழன்

பூமி பிளந்து

ஜீவ சமாதியான போது

சற்றே மங்கலாக கேட்டது -


சாதி மதவெறி ஊழல்

பூத கணங்கள்

கை கோர்த்தபடியே

"நம்மை

அறிவு விளக்கினுள்

அடக்காததால்

அடங்கிப் போனவர்கள்"

என்று கொக்கரிப்பது !

Sunday, May 20, 2012

எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது



தீச்சொல்  பேசிய 
குழந்தையை மிரட்டி 
கண்டித்து 
அடித்தும் 
அடங்காத கோபத்தில் 
தவறி 
வந்து விழுகிறது 
அதே
 தீச்சொல்!

Saturday, May 19, 2012

ஏனோ?



கதிர் கொறிக்கும் 

காக்கை விரட்ட 

சட்டை பேன்டில் 

சோளக்கொல்லை  பொம்மை-

காய்த்து சிவந்த கரங்களுடன் 

மடை திறந்து 

களை பறித்து 

காவல் காக்கும் அப்பனுக்கு 

கோவணம்!



Thursday, May 17, 2012

சன்னலினூடே ஒரு பயணம்


புளிமூட்டையென ஜனத்திரளினுள் நுழைந்து

அடித்துப் பிடித்து

சன்னலோர இருக்கையில் அமர்கையில்

திடுக்கிட வைத்தது அந்த ‘படீர்’ சப்தம்-

எட்டு வயது சிறுவனொருவன்

தன் கையே தனக்குதவி என

முதுகில் அடித்துக் கொண்டு

பிச்சை கேட்கிறான்

விட்டெறியும் காசு

‘ஜல்’ என்று தரையில் விழ

அவன் ‘படீர்’ சுதி சேர்கிறான்

என்ன கொடுமை இது

இதை எல்லாம்

முழுமையாக காணக்கூடாது என்றுதான்

சன்னலுக்கு கம்பிகள் வைத்தனரோ?
என்று எண்ணத்தில் தோன்ற 

“குழந்தை தொழிலாளர் முறையை  ஒழிப்போம்” என்ற

போஸ்டரை தாண்டி வேகமெடுக்கிறது பேருந்து!

இதை ஒழிப்பது எங்ஙனமோ என்ற

ஏக்கத்துடன்

சாலையோர புளிய மரங்களும்

என் நினைவுகளும்

அவனை நோக்கி ஓட

எதிர் திசையில் தொடர்கிறது பயணம்!

Sunday, May 13, 2012

கனவாகவும் இருக்கலாம்


தனித்த இரவுகளில் 

நீடித்த சிந்தனைகளில் 

எடுத்திட்ட முடிவுகள் 

திட்டமிட்டு 

திருத்தி அமைத்து 

செயல்படுத்திட 

வெற்றியின் விளிம்பில் 

விழிப்பு !


Saturday, May 12, 2012

கண்ணாடி


தூசு படிந்த 

கண்ணாடியைத்

துடைக்க துடைக்க 

மெருகேறும் -

முகம்!


சிரிக்கும் போதும் 

கோபப்படும் போதும் 

மற்றவர்கள் கவனிக்கும் போதும் 

மனப்பிரமைக்குள் 

அழகாக நான் -

கண்ணாடி பார்க்கும்வரை!

Sunday, May 6, 2012

அடக்கம்



என்னதான் 
வானையே அளந்தாலும் 
தன் சிறகுகளை 
சுருக்கி தான் வைத்துக்கொள்கிறது 
சிட்டுக்குருவி !


Saturday, May 5, 2012

வினோதம்



என்னதான் படித்திருந்தாலும் 
கைநாட்டு 
வைத்தால் தான் 
வருகையை பதிய முடிகிறது 
எங்கள் அலுவலகத்தில் -
பயோ மெட்ரிக் எந்திரம்!


Friday, April 27, 2012

மீசைக்காரன்


“அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே”

என்று

அந்த மீசைக்காரன் பாடி வைத்திருந்தாலும்

இந்த மீசைக்காரன்

உச்சி மீது வீழுகின்ற போது  மட்டும்

அச்சமாக தான் இருகின்றது!

ஆயினும்

பார்த்து அலறுங்கள்-

கரப்பான் பூச்சி பயந்துவிட போகின்றது!


மனசாட்சிக்கு  பயப்படும்

ஒவ்வொருவரும்

கரப்பான் பூச்சிக்கும் பயப்படுங்கள்-

ஏன் தெரியுமா?

மனசாட்சியும்

கரப்பான் பூச்சியும்

இருட்டில் தானே ஒளிந்திருந்து

அவ்வபோது எட்டிப் பார்க்கின்றன!

Sunday, April 22, 2012

இரவு வானம்


இரவு  வானம்
வேணும் எனக்கு!

முந்திரிகளால் அலங்கரிக்கப்பட்ட
கருப்பு கேக்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

ஆயிரம் பற்களை காட்டி
சிரித்திடும் அழகு குழந்தை
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

கண்ணில்
கருவிழியும் உண்டு
வெண்விழியும் உண்டு
என்
இரவு வானம்
பார்வைகளை பதிவு செய்யும் கருவிழி
அது
கற்றுக் கொடுத்த
தொலைநோக்குப் பார்வைகள்
ஏராளம்!
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

உண்மையில்
பொருட்களுக்கு நிறமில்லை
எனக் கூறும்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!


எக்ஸ்கியூஸ்  மீ..,
உங்கள் செயற்கை விளக்குகளை
கொஞ்சம் அணையுங்களேன், பிளீஸ்
அப்படியே வெளியே வந்து
அண்ணாந்து பாருங்கள்
அந்த
விண்ணலங்கார விளக்குகளை !
இரவு வானம்
வேணும் எனக்கு!

அதெல்லாம் இருக்கட்டும்
அந்த
அயோக்கிய சூரியனை
யார் இப்போது
வரச் சொன்னது?
அசையாது
ஆயிரம் முனிவர்களிருந்த
தவத்தினை
கலைத்து விட்டானடா பாவி...
அந்த
 இரவு வானம்
வேணும் எனக்கு!

Sunday, February 19, 2012

ஏமாற்றம்



அவரவர் பொறுப்புகள்
அவரவருக்கு!
அவரவர் நியாயங்கள்
அவரவருக்கு!
ஒத்திசையும் தருணங்களில்
ஒரு சிலருக்கு
ஏற்படும் ஏமாற்றங்கள்-
வாழ்க்கை முடிச்சியின்
மறையாத தடங்கள்!

Monday, January 23, 2012

நிதர்சனம்



சில சமயங்களில்
நம்
விருப்பத்திற்கு மாறாக
சில நிகழ்வுகள்
நிகழ்ந்து விட்ட
பின்பு தான்
தெரிகிறது- அவை
நமக்கு
சாதகமானவை என்று!

நடப்பவை
நமக்கானவை இல்லாவிடினும்
நல்லவை என்பதில்
நிறைகின்ற மனம் -
அறிவு,
திறமை,
சாதுர்யம் என
அனைத்தையும்
விஞ்சி நிற்கின்றது!




Friday, January 20, 2012

மீண்டும் குழந்தையாவோமா?



கருவறையின் வெதுவெதுப்பு அனுபவித்து

அன்னையின் அரவணைப்பு தாண்டி

கிலுகிலுப்பை ஒலியினை இசைத்து

நடைவண்டி பாதைக்கு இசைந்து

நிலவினை அப்பமாக்கி உண்டு

விண்மீன்களுக்கு தூண்டில் போட்டு

தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

எண்ணத்தை கொள்ளை கொள்ள

விரட்டிப் பிடித்துவீதியிலே திரிந்து

விழியிலே நிறைந்து வீணை தந்திஎன

விரும்பி  மீட்டப்பட்டு

விஷமங்கள் யாவையும் 

விளையாட்டாகவே விரும்பப்பட்டு 

விண்வெளியில் பறந்த - அந்த 

சிறு பருவம்  குறு பருவமாக  

குறைந்து போய் விட

என்னில்

இன்னும்   மீதமிருக்கும்

அந்த பருவத்து செய்கைகள்

எவராலும் விரும்பப்படாமல்
ஏளனமாய் போய்விட்டதில்
மீண்டும் பிறந்து
அந்த குழந்தை பருவத்தில் குதூகலிக்க
குறைந்தது எத்தனை காலமாகுமோ
என்று
நீங்காத ஏக்கங்கள் நெஞ்செங்கும்!



Tuesday, January 17, 2012

எழுதியாகணும்

                  
              ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
 கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.

                  "ஒரு ஊரிலே கணேசன் என்ற பணக்காரர் இருந்தார்"
  என்று சிறுபிள்ளைதனமாக ஆரம்பித்தோ,

                  "வெளிர் ரோஸ் நிறவானில் உதைப்பட்ட பந்து போல்
சூரியன் போய் மறைவதை திக்... திக்...  மனதோடு பார்த்துக்
கொண்டிருந்த  கணேசனுக்கு இன்றைக்கெல்லாம் ஐம்பது
 வயதிருக்கும்" என்று ராஜேஷ்குமார் போல் ஆரம்பித்தோ,

                   "அதோ மெர்சிடிஸ் காரிலிருந்து சபாரி சூட்  சகிதம்
 இறங்கும் கணேசனை  உங்களுக்கு தெரியுமா?"  என்று
சுபா போல் ஆரம்பிதோ,

                 "
2012  ஜனவரி 7  கணேசன் கெமிக்கல்ஸ்              ஐம்பதின் எல்லையிலிருக்கும் கணேசனுக்கு காதோரம்
இருக்கும் நரை, முன் தலை வழுக்கை, சபாரி சூட் போன்றவை
அதிகம் தான்"  என்று ஆர்னிகா நாசர் போல் ஆரம்பிதோ,

எப்படியோ ,
                  ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.






நட்பு கவிதை III



கல்லூரி வாழ்க்கை
கடந்து விட்ட பின்னால்
கிடைக்கும் தனிமையில்
கனவாகிவிட்ட இனிமையை
நினைத்து ஏக்கமுறும் மனம்!

வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வந்து விட்டு
கூட்டுப்புழுவாய்
சுருங்கி போன துள்ளல்!

சமுத்திரமாய் ஆர்ப்பரித்து விட்டு
சிறுதுளியாய் குறைந்து போன பலம்!

இவை எல்லாம்
உள்ளுக்குள் ஏதேதோ செய்தாலும்
உள்ளிருக்கும் பட்சி மட்டும்
ஒன்று சொல்கிறது
உலகம் உருண்டை என்று!

Tuesday, January 10, 2012

நட்பு கவிதை II

நிலவும் நட்பும்




வெகுதொலைவு நிலவு

வீட்டுகிணற்றில் மிதக்கும்

வெள்ளித்தட்டாய் -

வெகுகாலமாய்

புதுப்பிக்கப்படாமல்

காலம் கடந்த நட்பு

பார்த்த,

குரல் கேட்ட கணத்தில்

பளீரென மின்னுவதென்ன?



 

Saturday, January 7, 2012

நட்பு கவிதை I

 கல்லூரி முடிந்தபின்...


தொலைந்து போனவர்களாக
நண்பர்கள்

அலைந்து திரியும்
மனம்

விளைந்த நெற்கதிர்களை
தினம்

அளைந்து தேற்றும் காற்றாக
நம்பிக்கை!